ஶ்ரீராம ராஜ்யம் படம் கடந்த மாதம் வந்தபோது அந்தப் படத்தைப் பார்த்துப் பரவசமாகிப் பகிர்வு ஒன்றும் கொடுத்திருந்தேன் இங்கே
அதனைத் தொடர்ந்து நண்பர் KRS என்ற கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களை இந்தப் படத்தின் பின்னணி இசையைப் பிரித்துக் கொடுக்கின்றேன் தகுந்த உரையை வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்ற போது மனுஷர் வாக்கு மீறாது அருமையானதொரு பகிர்வைத் தந்தளித்தார். உண்மையில் படத்தின் முழு ஒலிப்பதிவயும் வழங்கியபோது எந்தவித காட்சி ஓட்டமும் இல்லாது ஒலியை வைத்தே முன்னர் அவர் பார்த்த இந்தப் படத்தினை அசைபோட்டு எழுதிக் கொடுத்தது என்னளவில் ஒரு சாகித்யம் என்பேன். ஏற்கனவே மெளன ராகம் படத்துக்கும் இதே பாங்கில் தன் முத்திரையைக் காட்டியவர். மீண்டும் இவரோடு இணைந்து இன்னொரு இசைக்காவியத்தைக் கொடுப்பதில் மட்டற்ற மகிழ்வடைகின்றேன். இனித் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் சங்கீத சாம்ராஜ்யத்திற்கு கண்ணபிரான் ரவிசங்கர் துணையோடு அழைத்துப் போகின்றேன். இசையென்னும் இன்ப வெள்ளத்தை அள்ளிப் பெருகுங்கள்.
ராமாயணம்-ராஜாயணம்
* கம்ப இராமாயணம் = தமிழ்க் காப்பியம்!
* இராஜா இராமாயணம் = இசைக் காப்பியம்!
வால்மீகி எழுதிய ஒரு வரலாற்று-கற்பனையை…
தமிழ் மரபுக்குத் தக்கவாறு குடுத்தான் = கம்பன்!
இசை மரபுக்குத் தக்கவாறு குடுத்தான் = இளையராஜா!!

ஒரே படத்துல 16 பாட்டை இந்தக் காலத்துல யாருப்பா கேட்பாங்க? என்னமோ BGM, BGMன்னு சொல்றாங்களே! என்ன பெருசா இருக்கு இந்த SRR – ஸ்ரீ ராம ராஜ்ஜியத்துல? பார்க்கலாமா??
இராமாயணத்தின் கதை எல்லாருக்கும் தெரிஞ்சது தான்! அது மட்டுமா? ஒவ்வொருத்தரும் அவங்க சொந்த இராமாயணத்தையும் இதுல கொண்டாந்து சேர்ப்பாங்க!:)
ஆத்திகனோ, நாத்திகனோ, இலக்கியவாதியோ, புரட்சிவாதியோ – எல்லாருக்கும் இராமாயணத்தில் ஏதோ ஒன்னு இருக்கு!
தெரிஞ்ச கதை தான்! ஆனால் தெரியாத உணர்ச்சிகள்! = அதை எப்படி ஒருத்தருக்குச் சொல்வது?
* சீதை துன்பப் பட்டாள், தெரியும்!
* இராகவன் லூசுத்தனமா நடந்துக்கிட்டான், தெரியும்!
ஆனா, நமக்கு-ன்னு நடக்காத வரை, அது வெத்துக் கதை தானே!
எத்தனை பேரு, காதலில் சண்டை போட்டுட்டு, அவள் தவிக்கும் போது, ஒளிஞ்சி இருந்து பாத்து இருக்கோம்??
அட அவளா? இந்நேரம் சிக்குனு சிக்கன் பிரியாணி தின்னுக்கிட்டு இருப்பா-ன்னு நாம் நினைக்கும் அந்த அவள்…
காதல் பரிசான கைக்கடிகாரத்தை…கண்ணின் மேல் வச்சிக்கிட்டு…
அந்த நொடித் துடிப்பின் சத்தத்திலே…
தரையில் படுத்துக் கிடப்பதை…ஒளிஞ்சி இருந்து பார்த்தோம்-ன்னா?
இந்த உணர்ச்சிகளை எதில் எழுத முடியும்?
* பாட்டில் எழுதினா = காவியம்!
* இசையில் எழுதினா = இளையராஜா!
தெரிந்த கதை, ஆனால் தெரியாத உணர்ச்சிகளைப் படீர்-ன்னு நம் மனத்தில் போட்டு அடிக்கும் வித்தையைப் பார்க்கலாம், வாருங்கள்!
முதல் காட்சி! எல்லாரும் ஊருக்குத் திரும்புதல்! அயோத்தியில் இதையே தீபம் ஏத்தி வச்சி தீபாவளியாகக் கொண்டாடினார்கள்-ன்னும் சிலர் சொல்லுவாய்ங்க!
ராஜா ஏற்றி வைக்கும் தீபாவளி எப்படி? = ஜகதானந்த காரகா
பாட்டு ஒலிக்க, BGM ஒலிக்க….. மீண்டும் அதே பாட்டு, BGM…..
இதுலயே அந்த இன்ப மயமான தருணங்களை மாறி மாறி நெய்து விடுகிறார், ஒரு சீலையப் போல!
ரொம்ப ஆராவாரம் இல்லை…அதே சமயம், மகிழ்ச்சிக்கும் குறைவில்லை! = ஏன்?
ஏன்னா…ரொம்ப துன்பப்பட்டு வரும் இன்பத்தில்…அத்தனை மகிழ்ச்சி இருக்காது!
வலியின் நிழல் தங்கி, மனசுல ஒரு பக்குவமான நிலை இருக்கும்! ராஜா நெய்வதைக் கேளுங்க!
ஜகதானந்த காரகா = தியாகராஜர் பஞ்சரத்தினக் கீர்த்தனை!
ஜய ஜானகி பிராண நாயகா = என்ன ஆனாலும், அவனே அவளோட உயிரு-ன்னு மறுபடி மறுபடி ஒலிக்க வச்சி, பின்னால் வரப் போவதைக் காட்டுகிறாரோ?
ஒரு இராம சினிமாக் காவியத்தை, தியாகராஜர் மரபிசையோடு ஆரம்பிக்கணும்-ன்னு உனக்கு எப்படிய்யா தோனுது, இளையராஜா?
இது இப்படின்னா, பட்டாபிஷேகக் காட்சி = Symphony!
தியாகராஜரில் ஆரம்பிச்சி, கேட்டுக்கிட்டு இருக்கும் போதே, Symphony-இல் ஏத்தி வுடறது! அப்பப்போ, உன் டகால்ட்டி வேலையைக் காட்டிடுற ராஜா நீயி!!:)
Western என்று நெருடாமல், பட்டாபிஷேக கம்பீரம் என்றே இந்த இசை அழகாக அணி வகுக்கிறது!
Pl Note: இந்தப் படத்தில், பல BGM களின் துவக்கம், ஒவ்வொரு பாட்டின் முடிவில் இருந்தே துவங்குது!
உற்று கவனிச்சிப் பாருங்க! கண்டு புடிச்சிருவீக…வேறெந்த படத்திலும் இது ராஜா செய்யாத Technique! மெளன ராகம் உட்பட…
சீதையைக் காட்டுக்குத் துரத்தும் BGM பற்றி நான் இங்கே பேசப் போவதில்லை! எனக்கு ரொம்ப வலிக்கும் காட்சிகள் அவை!
நாடு-நாட்டு மக்கள் கருத்து தான் முக்கியம்-ன்னா, தம்பி கிட்ட நாட்டைக் குடுத்துட்டு, தானும் அவளோடு போயிருக்கலாமே??
தம்பிகள் ஒத்துக்க மாட்டாங்கன்னா….யானை யாருக்கு மாலை போடுதோ…அவங்களை மன்னன் ஆக்கிட்டு…..தம்பிகளோடு…அவளுடன் போய் இருக்கலாமே??
– அப்படிச் செஞ்சி இருந்தியானா….கோயிலில் உன்னைக் கையெடுத்துக் கும்பிட்டு இருப்பேன்…ஏனோ உன்னைக் கோயிலில் பார்க்க மட்டுமே தோன்றுகிறது! வணங்க அல்ல!!:(

இராம கதையைச் சொல்லும் மூன்று பாட்டு!
* தேவுள்ளே மெச்சிந்தி (Practice Song)
* ராமாயணமு (அயோத்தி தெருக்களில்)
* சீதா-ராமு சரிதம் (அரண்மனையில்…கம்பீர இசை)
தெருக்களில் பாடும் போது, அயோத்தி மக்களை இடிக்கும் இசை…டேய், ஒங்களாலத் தான் ஒரு அப்பாவி தனியாக் கிடந்து துடிக்குறா…பாட்டு வரிகளும் அப்படியே! எழுதியது யாரோ?
சீதையும் ராமனும் சந்திப்பது போலான மாயக் காட்சி! மெய்நிகர் (Virtual Reality)
இந்த இடத்தில் ராஜா போடும் BGM கேட்டாத் தெரியும், எதுக்கு எல்லாரும் ராஜா ராஜா-ன்னு அனத்துறானுங்க-ன்னு :))
* பழைய பாடலையே BGM ஆக்கி, Flashback காட்டுவாரு!
* அதே சமயம், பழைய பாடலில் எல்லாமே புதுப்புது வாத்தியங்கள்!
என்னமா இசையால் ஒரு Flashback இயக்கம்! யோவ் இளையராஜா – நீ என்ன படத்தின் இயக்குனாரா? வெறும் இசை இயக்குனர் தானே? :))
அவன் அவளைப் புரிஞ்சிக்கிட்டானோ இல்லையோ, அவள் அவனை நல்லாப் புரிஞ்சி வச்சிருக்கா!
அவளா சந்தேகப்படுவா?…தன் புருசன் இன்னோரு கண்ணாலம் கட்டிக்கிட்டானோ?-ன்னு…
இல்லை!
ஆனா, ஊரு சொன்னா எதையும் செய்யத் துணியும் லூசு ஆச்சே தன் புருசன்!

ஏதோ நாட்டுக்காக அஸ்வமேத யாகம் செய்யறான், பொண்டாட்டி பக்கத்துல இல்லாமச் செஞ்சா, நாட்டுக்கே ஆபத்து-ன்னு ஒத்தைப் பிராமணன் கெளப்பி விட்டாப் போதுமே…
ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி ஐயா, இன்னோரு கண்ணாலம் கட்டிக்குவாரா?
இராமன் என்ன நிலையில் இருக்கான்-ன்னு பாக்கத் துடிக்குது அவளுக்கு! தன்னை ஊர் அறிய மறுதலித்தவன்…இப்போ உள்ளத்து அளவிலும் மறுதலிப்பானோ?-ன்னு படக்படக்…
வால்மீகி மூலமா, ஆவியாகி, anonymous ஆக உள்ளே வரும் சீதை…தனக்குப் போட்டியாக…இன்னொருத்தியைக் காணும் காட்சி…

சீதையின் சிலையை வடிச்சி வச்சிக்கிட்டு…நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்!!!
அவன்-அவள் = ஊர் அளவில் பிரிஞ்சாலும், உள்ளத்து அளவில் பிரிவதே இல்லை!
இந்த BGM இல் கல்லும் கரையும்! காதலிச்சி இருக்குறவன் எவனும் கட்டாயம் இந்த BGM கேட்டு கண் பனிக்கும்!!
ராமரின் பள்ளியறைக்கு சீதை ஆவியுருவில் வந்து, ராமர் தன் நினைவில் என்றும் இருக்கும் உண்மையைக் கண்டுணரும் போது
படத்தின் Grand Finale & Graphic Effort – ஒருத்தியின் தாங்கும் எல்லை தான் எவ்ளோ?
இலங்கையில் மரத்தின் கீழ் தற்கொலை முயற்சி, அப்பறம் பலர் முன்னிலையில் மறுதலிப்பு-தீக்குளித்தல்…..அப்படியே தொடர்ச்சியா ஒவ்வொன்னா….
பூமி பிளந்து, அவள் உணர்ச்சியை எல்லாம் ஒட்டு மொத்தமாய் விழுங்கும் சுனாமிக் காட்சி!
பாலகிருஷ்ணா = இராமரா? நயன்தரா = சீதையா?
அடக் கொடுமையே-ன்னு கேலி பேசுபவர்களையும்….பாலகிருஷ்ணா/நயன் முன்னேயும் பின்னேயும் இசையை ஓடவிட்டு, அவர்கள் நடிக்காததையும், உணர்ச்சியால் கொண்டு வந்து தந்த படம் இது!
படத்தில், பாடல்களின் இசையைச் சொல்ல, தனிப் பதிவு தான் போடணும்! இங்கு BGM பற்றி மட்டுமே கொஞ்சமே கொஞ்சம் பேசினோம்!
இவ்வளவு பெரிய புராணப் படத்துக்கு, ராகங்கள் இல்லாத பாட்டா?
சின்னக் கண்ணன் அழைக்கிறான்-ரீதிகெளளை புகழ் இளையராஜா…இந்தப் படத்தில் போட்ட ராகங்கள் என்ன-ன்னு அறிஞ்சவங்க வந்து சொல்லட்டும்! நமக்கு இலக்கணம் அம்புட்டு போதாது:)
ஸ்ரீராம லேரா = அம்சாநந்தி-ன்னு மட்டும் தெரியுது!
கலி நிங்கி நீரு = கீரவாணியா?
சீதா சீமந்தம், அதை விட, தாண்டகம் என்னும் இசைப் பகுதி அமர்க்களம்! கேட்டுப் பாருங்க!
படம் முழுக்க தபேலா + வீணையின் ஆட்சி!
BGM-இல் வீணையை இம்புட்டு புழங்கி இருப்பது, இதுவாத் தான் இருக்கும்-ன்னு நினைக்கிறேன்!
SPB = கலக்கல்! ஸ்ரேயா கோஷல் = ஓக்கே, நல்லாப் பண்ணி இருக்காங்க!
சித்ரா = ஒரே ஒரு பாட்டு தானா?
இந்த ராஜா இதை மட்டும் ஏன் இப்படிச் செஞ்சாரு?
BGM என்பது கத்தி மேல் நடக்கும் வித்தை!
தன் இசைப் புலமையைக் காட்ட வேணும்-ன்னு நினைச்சா, இசையே பெருசாகி, காட்சி கவிழ்ந்து விடும் அபாயம்…
அதே சமயம், உணர்ச்சிகள் பேச வேண்டிய இடத்தில், இசை மட்டுமே பேசி ஏங்க வைக்கும் இசை!
BGM இல்லாம, காதுல பஞ்சி வச்சிக்கிட்டு…..இன்னொருகா அரங்கத்தில், ஸ்ரீ ராம ராஜ்ஜியம் பாருங்க…
இளையராஜாவுக்கு இப்பதிவிலே முகஸ்துதி செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள்!
மனித உணர்வுகளை…….இசையோடு கோர்த்துக் கட்டும் மாயம்!
அதுவும் நாகரீக keyboard காலத்திலும்…வீணை, தபேலா, நாதசுரம், புல்லாங்குழல் போதாது-ன்னு, இன்னும் என்னென்னமோ Western Instruments…..
நூறு வாத்தியக் கருவி, ஒன்னா வந்து, உங்க முன்னாடி வாசிச்சா எப்படி இருக்கும்???
பல BGM களின் துவக்கம், ஒவ்வொரு பாட்டின் முடிவில் இருந்தே துவங்கும் புது முயற்சி!!
ஏ, மாயக் காரனே, இளைய-ராஜாவே……
* அன்று கம்பன் செய்த இராமாயணம் = தமிழ்க் காப்பியம்!
* இன்று நீ செய்த இராமாயணம் = இசைக் காப்பியம்!
திருவாசகத்துக்குப் பின்….இந்தப் படத்தால்…..
கம்பனைப் போல்……….”காவியப்” புகழ் உனக்கு!
இறவா இசையோடு இருப்பாய் நீ!
முகப்பு இசை
ராமர், சீதை மஞ்சத்தில் காதல் மொழி பேசும் நேரம்
ராமர் சீதையோடு மஞ்சத்தில் இருக்கும் போது ஆராய்ச்சி மணி ஒலிக்க, சீதை தடுத்தும் ராமர் நீதி கேட்கப் புறப்படும் போது
சீதை குறித்த அபாண்டத்தை பத்ரன் தயங்கித் தயங்கி ராமரிடம் கூறும் போது
சீதை குறித்த புறணியைக் கேட்டு ராமர் மதி கலங்கும் போது
ராமரின் கட்டளைப்படி இலக்குவன் சீதையைக் காட்டுக்கு அழைத்துச் செல்லும் காட்சி
வால்மீகி முனிவர் காட்டுக்குள் சீதை வரவேற்கப்படும் போது
சீதைக்கு முறையான வளைகாப்பு நடத்தவில்லையே என்று ஆதங்கப்படும் கோசலை தன் மனக்கண்ணில் அந்த நிகழ்வைக் காணும் போது

ராமர் இன்னும் தன் நினைவில் இருப்பாரோ அல்லது இன்னொரு துணை தேடியிருப்பாரோ என்று கலங்கும் சீதை
ராமர் செய்யும் அஸ்வமேத யாகம்
அஸ்வமேத யாகத்தில் பயணித்த குதிரையை லவ குச சகோதரர்கள் காட்டுக்குள் கட்டிப்போடும் போது இலக்குமணன் தன் படையோடு வந்து அவர்களோடு போர் புரியும் காட்சி
லவகுச சகோதரர்களைச் சந்திக்க வரும் இராமர், சீதையைக் காண்பதும் லவ குச சகோதர்கள் தன் பிள்ளைகள் என்று உணர்வதும், இறுதியில் பூமாதேவியிடம் சீதை தன்னை ஒப்புவிப்பதும். இது நீண்டதொரு இசைத்துண்டு
