“பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே…
பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை
பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே
மங்களம் தங்கிடும் நேரத்திலே எம்
மன்னவன் பிறந்தான் ஈழத்திலே”
ஈழத்திலும், அதைத் தாண்டி ஈழத்தமிழர் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளும் மேற் சொன்ன பாடல் ஒவ்வொரு கார்த்திகை 26 இலும் ஒலிக்கும் வேத மந்திரம் போலானது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் புகழ் கூறும் பாடலைப் பிரபல பாடகர் ஜெயச்சந்திரன் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் உட்பட்ட பாடல்களைக் “களத்தில் கேட்கும் கானங்கள்” என்ற பெயரில் முப்பது வருடங்களுக்கு முன்னர் சென்னையில் வைத்து தேவேந்திரன் இசையமைக்க ஒலிப்பதிவானது. அந்த வாய்ப்பை இன்னொரு பிரபல இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதனே ஏற்படுத்தியிருந்தார்.
“களத்தில் கேட்கும் கானங்கள்” பாடல் தொகுப்பில் “வீசும் காற்றே தூது செல்லு தமிழ் நாட்டிலிருந்தொரு சேதி சொல்லு” என்று தனித்தும் “தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்” என்று ஜோடி சேர்ந்தும் வாணி ஜெயராம் பாடியிருக்கிறார். “நடடா ராஜா மயிலைக் காளை” பாடலை மலேசியா வாசுதேவன் பாட, “காகங்களே காகங்களே காட்டுக்குப் போனீர்களா”
சிறுவர் பாட்டு, “ஏழு கடல்களும் பாடட்டும்” , “காற்றும் ஒரு கணம் வீச மறுத்தது (தீயினில் எரியாத தீபங்களே)” ஆகிய உணர்வெழிச்சிப் பாட்டுகள், இவற்றோடு இசைக்குயில் பி.சுசீலா பாடிய “கண்மணியே கண்ணுறங்கு” தாலாட்டு, “அடைக்கலம் தந்த வீடுகளே போய் வருகின்றோம் நன்றி” என்ற மெல்லிசைப் பாட்டு என்று எல்லாமே காலம் தின்று விழுங்காத மறக்க முடியாத பாட்டுகள். இந்திய அமைதிப்படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் உச்சமடைந்த சமயத்தில் வெளிவந்த “களத்தில் கேட்கும் கானங்கள்” இன்றுவரை தமிழீழ எழுச்சிப் பாடல்களில் அதி முக்கியத்துவம் கொடுத்துப் பேணப்படுபவை. பாடல்களை மனப்பாடம் செய்யுமளவுக்குப் பலருக்கு இந்த இசைத் தொகுப்பு பதியம் போட்டது.
களத்தில் கேட்கும் கானங்கள் இசைத் தொகுப்பைக் கேட்க
https://eelamsong.blogspot.com.au/2014/11/eelam-mp3_25.html
தொண்ணூறுகளின் ஆரம்பத்திலே மடை திறந்தாற் போலப் புதுப் புது பாடகர்கள், இயக்குநர்கள், அறிமுக நாயக, நாயகிகளோடு படங்கள் இவற்றோடு புது வர இசையமைப்பாளர்களும் நிறையப் பேர் தமிழ்த் திரையுலகுக்கு வந்தார்கள். ஒப்பீட்டளவில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக வந்த புதுப் புதுக் கலைஞர்களுடனான தமிழ்த் திரைப்படங்களோடு ஒப்பிடும் போது முந்திய எண்பதுகளில் ஒரே சமயத்தில் ஒரு குறுகிய காலத்தில் இப்பேர்ப்பட்ட அலை அடித்ததில்ல்லை.
அப்போது தான் வானொலிகளும் பண்பலை வரிசைக்குத் தாவிக் கொண்டிருந்த சமயம் அது.
“தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க
தேவதை உன் தேகம் தொடும் தென்றல் கூட வாழ்க”
https://youtu.be/tbJzW7x42Gc
என்ற பாடல் காற்றலைகளில் கலக்கிக் கொண்டிருந்தது. யாராடா இது ரவி தேவேந்திரன் என்ற புது இசையமைப்பாளர் என்ற இன்ப அதிர்ச்சியோடு அந்தப் பாடலில் மூழ்கிப் போன காலமது. கூடவே பூனைக்கண் அழகி, சின்னக் குஷ்பு என்று அழைக்கப்பட்ட சிவரஞ்சனி மேல் மையல் கொண்டு அலைந்த இளைஞர் கூட்டம் அவரின் இயற்பெயர் ஊஹா முதற்கொண்டு சாதகத்தை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் போது இப்படி ஒரு பாட்டு தலைவியின் புதுப் படத்தில் வருகிறது என்றால் சும்மா விடுவார்களா என்ன?
அந்த ஆரம்ப இசை இதயத் துடிப்புப் போலப் படபடக்க,
இந்தப் பாட்டின் இடையிசையில் வரும் புல்லாங்குழல் இசை இளையோருக்கோ மகுடி வாசிப்பது போல மயக்கத்தைக் கொடுத்தது.
“தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க” பாடலின் இசை நேர்த்தியைப் பார்த்தால் புதிதாகச் சாதிக்க வரும் இசையமைப்பாளரின் துடிப்பும், நேர்த்தியும் இருக்கும். ஆனால் எண்பதுகளில் “வேதம் புதிது” தொட்டு இன்னொரு பரிமாணத்தில் இசை கொடுத்த தேவேந்திரன் தான் ரவி தேவேந்திரன் என்று தீவிர ரசிகர்கள் கண்டுணர்ந்தார்கள்.
“முத்தம் கொடுக்கணும் முத்தம் கொடுக்கணும் முத்துமணிக் குயிலே” பாட்டைக் கேட்டால் அச்சொட்டான இளையராஜா பாணியில் எஸ்.ஜானகி பாடியிருப்பது போல இருக்கும்.
“நிலவென்ன பேசுமோ” என்று பாடிய இசையமைப்பாளர் சந்திர போஸையோ அல்லது நாகூர் ஹனீபாவின் குரலை ஒத்துப் பாடியது போல இருக்கும்
“நாளைக்கும் நிலவு வரும் நாமிருக்க மாட்டோம்” என்ற பாட்டு.
“ஓ பறவைகளே ஓ பறவைகளே நில்லுங்கள்” எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா பாடிய பாடல் தொண்ணூறுகளின் காதலர் சோக கீதங்களில் ஒன்றானது.
“புதிய தென்றல்” திரைப்படம் ரமேஷ் அர்விந்த், சிவரஞ்சனி நடிக்க, புதுமுக இயக்குநர் பிரபாகர் இயக்கியது. அப்போது வெளிவந்து கொண்டிருந்த சினிமா சஞ்சிகை பொம்மை இதழில் இரண்டு முழுப்பக்க விளம்பரங்கள் போடுமளவுக்குப் பிரபலப்படுத்தப்பட்டது. ஆனால் முன் சொன்ன அதியற்புதமான பாடல்களைக் கொடுத்தும் பலமான இன்னொரு சுற்று ரவி தேவேந்திரன் என்ற தேவேந்திரனுக்கு வாய்க்கவில்லை.
புதிய தென்றல் படத்தின் அனைத்துப் பாடல்களையும் கேட்க
https://youtu.be/AEA9bmYgJTY
கலைஞர் கருணா நிதி கதை, வசனம் எழுதி மு.க.ஸ்டாலின், கார்த்திக் நடித்த “ஒரே ரத்தம்”, இயக்குநர் விசு ஆனந்த விகடனில் கதையாக எழுதிப் பின் பி.நாகிரெட்டி தயாரித்து வந்த “மீண்டும் சாவித்திரி” (விசு இதுவரை இயக்கிய கடைசிப்படம்) போன்றவை தேவேந்திரன் இசையில் குறிப்பிட வேண்டிய படங்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கூட “மூணார்” என்ற படத்துக்கு இசையமைத்தார். புகழேந்தி தங்கராஜ் இயக்கிய ஈழப் பின்னணியில் உருவான “கடல் குதிரைகள்” படத்துக்குக் கடந்த வருடம் இசையமைத்து வெளியிட்டார்.
இந்தத் தொடரின் முந்திய பகுதிகள்
வேதம் புதிது
இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎻 🌼 வேதம் புதிதுமண்ணுக்குள் வைரம் படத்துக்குப் பின் இப்படியொரு பெரிய வாய்ப்பு…
Posted by Kana Praba on Wednesday, September 13, 2017
மண்ணுக்குள் வைரம்
இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் – மண்ணுக்குள் வைரம் 🌴🍂மண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள்…
Posted by Kana Praba on Thursday, September 7, 2017
காலையும் நீயே மாலையும் நீயே & உழைத்து வாழ வேண்டும்
இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎸🎻 காலையும் நீயே மாலையும் நீயே 🎷🥁 உழைத்து வாழ வேண்டும் 🎺எவ்வளவு தான் திறமை…
Posted by Kana Praba on Thursday, November 9, 2017
கனம் கோட்டார் அவர்களே
இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎼🐞 கனம் கோட்டார் அவர்களே 🔨பெங்களூருச் சிறையில் இருக்கும் சசிகலா அடிக்கடி…
Posted by Kana Praba on Wednesday, September 27, 2017
ஆண்களை நம்பாதே
🎻 இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎸ஆண்களை நம்பாதே ❤️“காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களேசோக நெஞ்சங்களே நீங்கள்…
Posted by Kana Praba on Tuesday, March 6, 2018
“தென்றலுக்கு மேடை தந்த தேவராஜன் வாழ்க”
கானா பிரபா
16.03.2018
அடுத்த தொடர் வரும் வாரம் முதல் இன்னிசை இரட்டையர் மனோஜ் கியான்